சுதந்திர தின பேச்சு போட்டி

பள்ளியே எனது வீடு 
கல்வியை எனது வாழ்க்கை 
என வாழ்ந்து வரும் 
தலைமை ஆசிரியர் அவர்களே,
உயரிய நோக்கத்தில் 
உலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் 
உன்னதமான ஆசிரியப் பெருமக்களே,
சிட்டுக்குருவிகளே
தட்டான் பூச்சிகளே 
முயல் குட்டிகளே
குட்டி மேதைகளே
வருங்கால தூண்களே
எதிர்காலம் நீங்களே
என் அன்பினிய
மாணவச் செல்வங்களே...
உங்கள் அத்தனை பேரையும் 
வணங்கி முடித்து
பேசப் போகிறேன்
என் தலைப்பை பிடித்து

அல்லும் பகலும் உழைத்து.. 
அடியிலும் உதையிலும் பிழைத்து.. 
ஒற்றுமையோடு நிலைத்து 
வேற்றுமை எண்ணம் களைத்து... 
அடிமை விலங்கினை உடைத்து... 
அழுதோர்  கண்ணீரை துடைத்து.... 
பெற்ற சுதந்திரக் காற்றை சுவாசிக்க... 
போராட்ட வீரர்கள் தியாகத்தை யோசிக்க... 
சிந்திய ரத்தமும் பெருமையை சொல்லுமே... 
சுதந்திரம் காற்றும் பெருமையாய்  வெல்லுமே.

"பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும் 
நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்பதை உணர்ந்து 
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! 
இப்பயிரைகண்ணீராற் காத்தோம்
கருகத் திருவுளமோ?...
என்று கண்ணீர் விட்டு காத்து கிடைத்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா... அந்த தியாகிகளை நினைவில் வைத்துள்ளோமா ?

சத்தியத்தின் வழிநின்றே 
சுதந்தி ரத்தை சரித்திரத்தில் 
பெற்றாரை மறக்க லாமா ! 
தத்துவத்தில் உறுதியாக
நின்று தானே தகுதியான 
தலைவரையே  மறக்கலாமா ! 
வித்தகமாய் முத்திரையை 
பதித்து நின்று வெற்றிபெற்ற 
நம்மவரை  மறக்க லாமா ! 
புத்துணர்ச்சி விடுதலையைப் 
பூக்க வைத்துப் போர்புரிந்த 
நல்லோரை  மறக்க லாமா ! 

மண்ணிலே மண்டியிட்டு 
அடிமையாய் வாழ... 
வேற்று நாட்டவர் மண்ணை 
தொட்டு நம்மையே ஆள... 
யானை காலிலே மிதிபட்ட  
எறும்புகள் போல... 
ஏழை மக்களின் துன்ப 
துயரங்கள்  நீள.. 
அஞ்சிடா  நெஞ்சமும் 
அடிபணியாது  கொஞ்சமும்
ஒற்றுமை என்னும் வாளெடுத்து.. 
போராட்டம் என்னும் போர் தொடுத்து... 
விடுதலை என்ற முழக்கம் பிறந்து.... 
பல தியாகிகள் உயிர் துறந்து... 
அகிம்சை வழியில் சிறந்து....
பெறப்பட்டது சுதந்திரம் என்னும் அருமருந்து

இந்திய சுதந்திரம் பற்றி ஒவ்வொரு இந்தியனும் வெவ்வேறு கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். சிலருக்கு, இது நீண்ட போராட்டத்தை நினைவூட்டுகிறது, அதே நேரத்தில் இளைஞர்களுக்கு இது நாட்டின் பெருமை மற்றும் மரியாதைக்காக நிற்கிறது.  சில பேருக்கு பள்ளியில் இலவசமாக இனிப்பு வழங்கும் நாள் மட்டும் தான். நாடு முழுவதும் தேசபக்தியின் உணர்வைக் நாம் காண வேண்டும். இந்தியர்கள் நாடு முழுவதும் தேசிய உணர்வு மற்றும் தேசபக்தி உணர்வுடன் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் . இந்த நாளில் ஒவ்வொரு குடிமகனும் பண்டிகை உணர்வுடன் மக்களின் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையில் பெருமிதத்தை உணர வேண்டும். .இது சுதந்திரக் கொண்டாட்டம் மட்டுமல்ல, நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாடும் விழா என உணர வேண்டும். 

தமிழ்நாட்டில் மன்னர்கள் மட்டுமின்றி கலைஞர்கள், கவிஞர்கள், உயர்கல்வி கற்றவர்கள் முதல் பாமரக் குடிமக்கள் வரை அனைவரும்  விடுதலைக்காக  போராடியுள்ளனர். எண்ணற்ற தியாக சீலர்கள் தம் வாழ்வைத் துச்சமென மதித்து பாரதத்தாயின் அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்தனர். அவர்கள் அரும்பாடுபட்டு பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தை நாம் பேணிக் காக்க வேண்டும்.

சாதி மத வேறுபாடு ஒழித்து,
பாரத தாயின் பாதம் பணிந்து, 
ஒற்றுமையில் நீ உயர்ந்து,
தேசிய கொடியை நீ உயர்த்து,
பாரத தாயை நேசிப்போம்.
சுதந்திர காற்றை சுவாசிப்போம்.
தியாகிகள் வரலாற்றை வாசிப்போம்.
பெற்ற சுதந்திரத்தை காத்திடுவோம்
அவர் தியாகத்தை தினமும் போற்றிடுவோம்
ஒற்றுமையாய் நாம் வாழ்ந்திடுவோம்
இந்தியர் என்றே பெருமை கொள்வோம்.

பிறந்த பிறப்பினை நலமாக்கி 
பண்பினில் மனிதனை வளமாக்கி
நிறைந்த சேவையை நிகழ்வாக்கி
நன்றியை நெஞ்சினில் மிகத்தேக்கி 

பேசியது சுருக்கம்
கருத்தோ பெருக்கம்
இனி தேவை இல்லை விளக்கம்
வாய்ப்பிற்கு நன்றி வணக்கம்...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி