சமத்துவமே மகத்துவம் - பேச்சுப்போட்டி


அறிவின் கடலைக் கடைந்தவனாம்,
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம், 
தமிழன் என்றோர் இனமுண்டு,
தனியே அவர்க்கொரு குணமுண்டு,
கலைகள் யாவினும் வல்லவனாம்,
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்,
தானம் வாங்கிடக் கூசிடுவான்,
தருவது மேல் எனப் பேசிடுவான்,
அமிழ்தம் அவனுடை வழியாகும் ,
தமிழே அவனுடை மொழியாகும்.
தமிழால் இயங்கி 
தமிழில் மயங்கி  
அவையில் இருக்கும்
அனைவரையும் வணங்கி
பேசப் போகிறேன் 
என் தலைப்பில் இறங்கி...

அனைவரும் சமம்.
அதுதான் சமத்துவம். 
பிறப்பாலும் , 
செய்யும் தொழிலாலும்,
பேசும் மொழியாலும், 
பிறந்த இடத்தாலும் , 
சாதி மதத்தாலும் 
இங்கு எவனும் உயர்ந்தவனும் இல்லை, யாரும் தாழ்ந்தவரும் இல்லை...
இதைத்தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
"எவர் உடம்புக்கும் சிவப்பே 
ரத்த நிறமப்பா 
எவர் விழி நீர்க்கும் உவர்ப்பே 
இயற்கை குணமப்பா"
 என்கிறார்...
இங்கு எல்லோரும் ஒன்று தான். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தான் இதைத்தான் பாரதியார்,
"எல்லோரும் ஓர் குலம்
 எல்லோரும் ஓரினம்
 எல்லோரும் இந்திய மக்கள்
 எல்லோரும் ஓர் நிறை
 எல்லோரும் ஓர் விலை
 எல்லோரும் இந்நாட்டு மன்னர்"
 என்று கூறுகிறார்..
"வண்ணங்கள் வேற்றுமை பட்டால் அதில் மானுடர் வேற்றுமை இல்லை"
எண்ணத்தால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று குறிப்பிடலாமே தவிர 
உடல் வண்ணத்தால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று ஏதுமில்லை...
சாதி மதத்தில் மட்டுமல்ல 
ஆணை விட பெண் எந்த வகையிலும் குறைவானவள் இல்லை. பெண்ணை சரிசமமாக நடத்துவதால் மட்டுமே இந்த வையம் தழைக்கும் அதுவே சமத்துவம் என்பதை 
"ஆணும் பெண்ணும் நிகரனக் கொள்வதால் அறிவில் ஓங்கி 
வையம் தழைக்கும்"
 என்கிறார் பாரதிதாசன்... 
நல்ல உள்ளம், தூய உள்ளம், என்பது அனைவரும் ஒன்று என நினைக்கும் உள்ளந்தான் என்பதை 
"தூயஉள்ளம் அன்புள்ளம் 
பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெலாம் 
ஒன்றே என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்"
என்று பாரதிதாசன் கூறுகிறார்... 
ஒருவர் உயர்ந்தவர் ஒருவர் தாழ்ந்தவர் என்றெல்லாம் பேதம் கண்டுவிட்டால் வாழ்வில் எப்படி இன்பம் உண்டாகும்...
"தாழ்வென்றும் உயர்வென்றும்
சமூகத்திற் பேதங்கொண்டால்!
வாழ்வின்பம் உண்டாகுமோ?
பிறப்பி லுயர்வுதாழ்வு
பேசும் சமூகம் மண்ணில்
சிறக்குமோ சொல்வாயடி
இதந்தரும் சமநோக்கம்
இல்லா நிலத்தில் நல்ல
சுதந்தரம் உண்டாகுமோ -- சகியே
சுதந்தரம் உண்டாகுமோ?
தீண்டாமை என்னுமொரு பேய் – இந்தத்
தேசத்தினில் மாத்திரமே திரியக்கண்டோம்.
அற்பத் தீண்டாதார் என்னும்
அவரும் பிறரும் ஓர்தாய்
கர்ப்பத்தில் வந்தாரன்றோ -- சகியே
ஓர் தாய் கர்ப்பத்தில் வந்தாரன்றோ" 
என்று குமுறுகிறார் புதுவை குயில்.
இங்கு இருப்பது அனைத்தும் எல்லோருக்கும் சொந்தம்...
"எல்லார்க்கும் தேசம்; எல்லார்க்கும் உடைமை எலாம்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!
எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக!
எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக.."
என்கிறார் புரட்சி கவிஞர்.
சமத்துவத்தால் உண்டானது உலகு
 சாதி மதம் பார்க்காது பழகு 
சமத்துவமே உண்மையான அழகு
சிறியவன், பெரியவன், ஏழை, பணக்காரன், கீழ் சாதி ,மேல் சாதி என்று பாராமல் என்னுடைய ஒளியை மொத்த பிரபஞ்சத்திற்கும் கொடுப்பேன் என்று இந்த அகிலத்தையே வாழவைக்கும் சூரியனைப் போலவும்,
என்னுடைய பார்வையில் உயர்வு தாழ்வு கிடையாது சமத்துவமே மகத்துவம் என்று  உலக உயிர்களை எல்லாம் செழிக்க வைத்து அருள் வழங்கி வாழ வைக்கும் மாரி மழையை போலவும் அனைவரையும் ஒன்றாக நினைத்து...
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,
அன்பென்று கொட்டு முரசே மக்கள் அத்தனைபேரும் நிகராம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வாழ்க்கையை செம்மைப்படுத்தி சமத்துவத்தால் மகத்துவம் அடைவோம் என்று கூறி  வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றி கூறி,
தெளிவுறவே அறிந்திடுவோம் தெரியா ஒன்றை, 
தெளிவு பெற மொழிந்திடுவோம் தெரிந்த பின்னே, 
தெரிந்ததும் தெளிவு பெறும் நம் அறிவு, 
தெளிந்த பின் உருவாகும் புது உறவு. தெரிந்த அனைத்தையும் தெளிவாகச் சொன்னேன்,
புரிந்த அனைத்தையும் புரியும்படிச் சொன்னேன். 
பேச்சினில் தீப்பற்றி, 
உண்மையைக் கைப்பற்றி,
பொய்மையை வெளியேற்றி,
தமிழன்னையைப் போற்றி,
பெறுவேன் பெருவெற்றி,
அனைவருக்கும் நல் நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி