தமிழைப் பற்றிய கவிதை
திகட்டாத செங்கரும்பின் சாறு எம்தமிழ்மொழி
கன்னித்தமிழ்க் கனியின் சுவையாம் எம்தமிழ்மொழி
காலத்தால் அழியா மொழியாம் எம்தமிழ்மொழி.
தங்கத் தமிழே சங்கம் கண்ட தமிழே!
மூவேந்தர் கையில் தவழ்ந்த முதுமொழியே!
கம்பன் கவிபாடி மகிழ்ந்த எம்மொழியே.
கவிஞர்கள் கையில் தவழ்ந்த செம்மொழியே!
இது அறத்தின் மொழி பண்பாட்டுமொழி
இலக்கண இலக்கியம் நிறைந்த தாய்மொழி
வாழ்வியல் நெறிசொன்ன உன்னத மொழியாம்
உலகத்தார் போற்றிய தொன்மை மொழியாம்.
தமிழே உனது உயிரெழுத்து உயிராகட்டும்
யாப்பு உனது காப்பாக நின்று போற்றட்டும்
எதுகையும் மோனையும் இணைந்து இயம்பட்டும்
எட்டுதிக்கும் ஒலிக்கும் மொழியே தமிழ்மொழியே.
வானம் தாண்டி வளரும் எம்மொழி
வையகத்தாரை வாழ்விக்க வந்த எம்மொழி
தமிழனின் வீரம் காத்த எம்மொழி
தரணியெங்கும் வெற்றிக்கொடி நாட்டும் - என் தாய்மொழி.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
தாமறிந்த கருத்தினை தேனாந்த தமிழோடு
தமிழன்னைக்கு சமர்ப்பித்தான் பாவேந்தன் பாரதிதாசன்.
தமிழை உயிர்மூச்சாகக் கொண்டு,
தான் என்ற ஒன்றை ஒழித்து
தமிழுக்குத் தனி அதிகாரம் படைத்து,
தமிழன்னைக்கு முடிசூடி மகிழ்ந்தான் தமிழன்.
-கவிஞர் நூர்ஜகான்
கருத்துகள்
கருத்துரையிடுக